அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.   (௭௱௨௰௧ - 721)
 

சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள் (௭௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார். (௭௱௨௰௧)
—மு. வரதராசன்

சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள். (௭௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள் (௭௱௨௰௧)
—மு. கருணாநிதி

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.   (௭௱௨௰௨ - 722)
 

‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர் (௭௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார். (௭௱௨௰௨)
—மு. வரதராசன்

தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார். (௭௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார் (௭௱௨௰௨)
—மு. கருணாநிதி

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.   (௭௱௨௰௩ - 723)
 

போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே! (௭௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே. (௭௱௨௰௩)
—மு. வரதராசன்

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார். (௭௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர் (௭௱௨௰௩)
—மு. கருணாநிதி

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.   (௭௱௨௰௪ - 724)
 

தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும். (௭௱௨௰௪)
—மு. வரதராசன்

பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க. (௭௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும் (௭௱௨௰௪)
—மு. கருணாநிதி

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.   (௭௱௨௰௫ - 725)
 

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். (௭௱௨௰௫)
—மு. வரதராசன்

பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க. (௭௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும் (௭௱௨௰௫)
—மு. கருணாநிதி

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.   (௭௱௨௰௬ - 726)
 

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை (௭௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு. (௭௱௨௰௬)
—மு. வரதராசன்

நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன? (௭௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை (௭௱௨௰௬)
—மு. கருணாநிதி

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.   (௭௱௨௰௭ - 727)
 

பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது (௭௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது. (௭௱௨௰௭)
—மு. வரதராசன்

கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம். (௭௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும் (௭௱௨௰௭)
—மு. கருணாநிதி

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.   (௭௱௨௰௮ - 728)
 

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே! (௭௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே. (௭௱௨௰௮)
—மு. வரதராசன்

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே. (௭௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை (௭௱௨௰௮)
—மு. கருணாநிதி

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.   (௭௱௨௰௯ - 729)
 

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர் (௭௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர். (௭௱௨௰௯)
—மு. வரதராசன்

நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர். (௭௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள் (௭௱௨௰௯)
—மு. கருணாநிதி

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.   (௭௱௩௰ - 730)
 

அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள் (௭௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். (௭௱௩௰)
—மு. வரதராசன்

அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே. (௭௱௩௰)
—சாலமன் பாப்பையா

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள் (௭௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆரபி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அவையஞ்சாமையே தனிச் சிறப்பாம்
அதுவே பேசுவோர் உடன் பிறப்பாம்

அநுபல்லவி:
அவையகத் தஞ்சாமல் பேசுவோர் சிலரே
பகையகத்துச் சாவார் பலர் அதனாலே

சரணம்:
ஓடி ஒளியும் பேடி கையில் கூர்வாளோ
உரை சொல்ல அஞ்சுமவன் படிக்கவும் நூலோ
தேடிட வேண்டுமோ இதன் பொருள் காணீர்!
தேறும் நல்லவையினில் பேசவும் முன் வாரீர்!

"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மையவர்" எனும் குறளின்
தகைமிகும் கற்றவர்முன் செல்லவே சொல்லும்
தயங்காமல் கேள்விக் கெல்லாம் விடை தந்தே வெல்லும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22