அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.   (௩௱௬௰௧ - 361)
 

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர் (௩௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். (௩௱௬௰௧)
—மு. வரதராசன்

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். (௩௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம் (௩௱௬௰௧)
—மு. கருணாநிதி

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.   (௩௱௬௰௨ - 362)
 

ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும் (௩௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். (௩௱௬௰௨)
—மு. வரதராசன்

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும். (௩௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும் (௩௱௬௰௨)
—மு. கருணாநிதி

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.   (௩௱௬௰௩ - 363)
 

அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை (௩௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை. (௩௱௬௰௩)
—மு. வரதராசன்

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. (௩௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம் (௩௱௬௰௩)
—மு. கருணாநிதி

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.   (௩௱௬௰௪ - 364)
 

தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும் (௩௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். (௩௱௬௰௪)
—மு. வரதராசன்

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌. (௩௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும் (௩௱௬௰௪)
—மு. கருணாநிதி

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.   (௩௱௬௰௫ - 365)
 

பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர் (௩௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். (௩௱௬௰௫)
—மு. வரதராசன்

ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார். (௩௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார் (௩௱௬௰௫)
—மு. கருணாநிதி

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.   (௩௱௬௰௬ - 366)
 

ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும் (௩௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே. (௩௱௬௰௬)
—மு. வரதராசன்

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம். (௩௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும் (௩௱௬௰௬)
—மு. கருணாநிதி

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்   (௩௱௬௰௭ - 367)
 

அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும் (௩௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும். (௩௱௬௰௭)
—மு. வரதராசன்

ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும். (௩௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும் (௩௱௬௰௭)
—மு. கருணாநிதி

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   (௩௱௬௰௮ - 368)
 

அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும் (௩௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும். (௩௱௬௰௮)
—மு. வரதராசன்

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும். (௩௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் (௩௱௬௰௮)
—மு. கருணாநிதி

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௩௱௬௰௯ - 369)
 

அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும் (௩௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும். (௩௱௬௰௯)
—மு. வரதராசன்

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும். (௩௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும் (௩௱௬௰௯)
—மு. கருணாநிதி

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.   (௩௱௭௰ - 370)
 

ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும் (௩௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். (௩௱௭௰)
—மு. வரதராசன்

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும். (௩௱௭௰)
—சாலமன் பாப்பையா

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும் (௩௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சிந்துபைரவி  |  தாளம்: ஆதி
பல்லவி:
ஆசை நோயை அழிப்பாய் - நாளும்
அன்பினிலே செழிப்பாய் நெஞ்சமே

அநுபல்லவி:
ஆசையினால் வரும் கேடோ அநேகம்
ஆகாது ஆகாது உனக்கதில் பாகம்

சரணம்:
துன்பம் தரும் அவாவின் தொடர்பு கொள்ளாதே
தூய நல்வாழ்வு பெற்றால் துயரம் இராதே
"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்" என்று குறளே பன்னும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22