துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.   (௩௱௪௰௧ - 341)
 

எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை (௩௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (௩௱௪௰௧)
—மு. வரதராசன்

எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். (௩௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை (௩௱௪௰௧)
—மு. கருணாநிதி

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.   (௩௱௪௰௨ - 342)
 

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும் (௩௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. (௩௱௪௰௨)
—மு. வரதராசன்

பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க. (௩௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும் (௩௱௪௰௨)
—மு. கருணாநிதி

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.   (௩௱௪௰௩ - 343)
 

ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும் (௩௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும். (௩௱௪௰௩)
—மு. வரதராசன்

ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம். (௩௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும் (௩௱௪௰௩)
—மு. கருணாநிதி

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.   (௩௱௪௰௪ - 344)
 

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும் (௩௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். (௩௱௪௰௪)
—மு. வரதராசன்

உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும். (௩௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும் (௩௱௪௰௪)
—மு. கருணாநிதி

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.   (௩௱௪௰௫ - 345)
 

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ? (௩௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ. (௩௱௪௰௫)
—மு. வரதராசன்

இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு? (௩௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக? (௩௱௪௰௫)
—மு. கருணாநிதி

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.   (௩௱௪௰௬ - 346)
 

உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான் (௩௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். (௩௱௪௰௬)
—மு. வரதராசன்

உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான். (௩௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான் (௩௱௪௰௬)
—மு. கருணாநிதி

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.   (௩௱௪௰௭ - 347)
 

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும் (௩௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. (௩௱௪௰௭)
—மு. வரதராசன்

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. (௩௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன (௩௱௪௰௭)
—மு. கருணாநிதி

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.   (௩௱௪௰௮ - 348)
 

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர் (௩௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். (௩௱௪௰௮)
—மு. வரதராசன்

ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே. (௩௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள் (௩௱௪௰௮)
—மு. கருணாநிதி

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.   (௩௱௪௰௯ - 349)
 

பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும் (௩௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும். (௩௱௪௰௯)
—மு. வரதராசன்

ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும். (௩௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும் (௩௱௪௰௯)
—மு. கருணாநிதி

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.   (௩௱௫௰ - 350)
 

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க (௩௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். (௩௱௫௰)
—மு. வரதராசன்

ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே. (௩௱௫௰)
—சாலமன் பாப்பையா

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும் (௩௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: எதுகுலகாம்போதி  |  தாளம்: மிஸ்ரசாப்பு
பல்லவி:
ஆசையெல்லாம் விடுத்தே
அமையும் துறவிகளே
அருளின் விளக்கம் என்போம்

அநுபல்லவி:
பாசபந்தம் கடந்தே பகையாம் ஐம்புலன்வென்றே
பற்றற்றான் தாளிணையை
பற்றும் மெய்ஞ்ஞானம் கொண்டே

சரணம்:
மாசு மறுவில்லாத மனமும் குணமும் சேர
மனிதன் யான் எனதென்னும் மமதை விலகிப்போக
இயேசு புத்தர் இளங்கோ இராமலிங்கர் மகாத்மா
இதயம்போல் அருள் உதயமாகவே
எண்ணும் குறள் வழி இன்புற்றோங்கவே




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22