நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.   (௲௱௩௰௧ - 1131)
 

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை (௲௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை. (௲௱௩௰௧)
—மு. வரதராசன்

காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை. (௲௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை (௲௱௩௰௧)
—மு. கருணாநிதி

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.   (௲௱௩௰௨ - 1132)
 

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன (௲௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன. (௲௱௩௰௨)
—மு. வரதராசன்

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன. (௲௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன் (௲௱௩௰௨)
—மு. கருணாநிதி

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.   (௲௱௩௰௩ - 1133)
 

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் (௲௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். (௲௱௩௰௩)
—மு. வரதராசன்

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன். (௲௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன் (௲௱௩௰௩)
—மு. கருணாநிதி

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.   (௲௱௩௰௪ - 1134)
 

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்! (௲௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. (௲௱௩௰௪)
—மு. வரதராசன்

ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. (௲௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது (௲௱௩௰௪)
—மு. கருணாநிதி

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.   (௲௱௩௰௫ - 1135)
 

தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள் தான், மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே! (௲௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள். (௲௱௩௰௫)
—மு. வரதராசன்

மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள். (௲௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள் (௲௱௩௰௫)
—மு. கருணாநிதி

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.   (௲௱௩௰௬ - 1136)
 

அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்! (௲௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. (௲௱௩௰௬)
—மு. வரதராசன்

அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன். (௲௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன் (௲௱௩௰௬)
—மு. கருணாநிதி

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.   (௲௱௩௰௭ - 1137)
 

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை (௲௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை. (௲௱௩௰௭)
—மு. வரதராசன்

அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை. (௲௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை (௲௱௩௰௭)
—மு. கருணாநிதி

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.   (௲௱௩௰௮ - 1138)
 

‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே! (௲௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே. (௲௱௩௰௮)
—மு. வரதராசன்

இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது. (௲௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல் (௲௱௩௰௮)
—மு. கருணாநிதி

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139)
 

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்! (௲௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது. (௲௱௩௰௯)
—மு. வரதராசன்

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது. (௲௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்! (௲௱௩௰௯)
—மு. கருணாநிதி

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.   (௲௱௪௰ - 1140)
 

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர் (௲௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர். (௲௱௪௰)
—மு. வரதராசன்

நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே! (௲௱௪௰)
—சாலமன் பாப்பையா

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள் (௲௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பைரவி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி என்று கூறும்

அநுபல்லவி:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணையதும் தன்னோடு

சரணம்:
பூம்பட்டு மேனி தொடலைக் குறுந் தொடியிவளே
புணர்ந்தும் பிரிந்தும் மாலை வருத்தும் துயரைச் செய்தாளே
யாம்பட்டது தாம்படாத வாறதனாலே
யாங்கண்ணின் காண நகுப அறிவிலார்களே

மடலூர் தலையாமத்திலும் உள்ளுகின்றேனே
படல் ஒல்லா பேதைக் கென்றன் கண்ணும் உறங்கேனே
கடலன்ன காம நோயால் தான் உழன்றாலும்
மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கதும் உண்டோ




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22