கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.   (௪௱௧ - 401)
 

நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும் (௪௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது. (௪௱௧)
—மு. வரதராசன்

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம். (௪௱௧)
—சாலமன் பாப்பையா

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும் (௪௱௧)
—மு. கருணாநிதி

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.   (௪௱௨ - 402)
 

கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும் (௪௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. (௪௱௨)
—மு. வரதராசன்

படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம். (௪௱௨)
—சாலமன் பாப்பையா

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது (௪௱௨)
—மு. கருணாநிதி

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.   (௪௱௩ - 403)
 

கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர் (௪௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். (௪௱௩)
—மு. வரதராசன்

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே. (௪௱௩)
—சாலமன் பாப்பையா

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள் (௪௱௩)
—மு. கருணாநிதி

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.   (௪௱௪ - 404)
 

கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (௪௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். (௪௱௪)
—மு. வரதராசன்

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். (௪௱௪)
—சாலமன் பாப்பையா

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் (௪௱௪)
—மு. கருணாநிதி

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.   (௪௱௫ - 405)
 

கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும் (௪௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும். (௪௱௫)
—மு. வரதராசன்

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். (௪௱௫)
—சாலமன் பாப்பையா

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும் (௪௱௫)
—மு. கருணாநிதி

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.   (௪௱௬ - 406)
 

‘உயிரோடு இருக்கின்றார்’ என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர் (௪௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர். (௪௱௬)
—மு. வரதராசன்

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர். (௪௱௬)
—சாலமன் பாப்பையா

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள் (௪௱௬)
—மு. கருணாநிதி

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.   (௪௱௭ - 407)
 

நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே! (௪௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது. (௪௱௭)
—மு. வரதராசன்

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும். (௪௱௭)
—சாலமன் பாப்பையா

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள் (௪௱௭)
—மு. கருணாநிதி

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.   (௪௱௮ - 408)
 

கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும் (௪௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும். (௪௱௮)
—மு. வரதராசன்

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது. (௪௱௮)
—சாலமன் பாப்பையா

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும் (௪௱௮)
—மு. கருணாநிதி

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.   (௪௱௯ - 409)
 

மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர் (௪௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. (௪௱௯)
—மு. வரதராசன்

படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. (௪௱௯)
—சாலமன் பாப்பையா

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும் (௪௱௯)
—மு. கருணாநிதி

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.   (௪௱௰ - 410)
 

அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவது போல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர் (௪௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். (௪௱௰)
—மு. வரதராசன்

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர். (௪௱௰)
—சாலமன் பாப்பையா

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு (௪௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தேவமனோகரி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
மண் பொம்மை இதனைப் பாரம்மா - பெயர்
வள்ளுவர்தான் கூறினாரம்மா

அநுபல்லவி:
மண் பொம்மை இதுவும் ஒரு
மனிதனின் பொம்மை
மதி பெறவே கடையில் வைத்தக்
கல்லாமைப் பொம்மை

சரணம்:
விலங்கொடு மக்கள் அனையர் என்று விளக்கமும் கூறும்
விளையாத களர் நிலமாய் விழிகளை மூடும்
அலங்காரம் செய்திட்டாலும் அரங்கின்றி ஆடும்
அறிவுடையார் வரவு கண்டால் அப்பாலே ஓடும்

கல்லாதவன் ஒட்பம் சொல்லிக் கழிய நல்ல தாயினும்
கொள்ளார் அறிவுள்ளார் அது எது கொடுத்த போதிலும்
சொல்லாமல் இருக்கப் பெற்றால் கற்றவர் மின்னே
கல்லாரும் நனி நல்லர் கருத்துரை என்னே!




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22