தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.   (௨௱௬௰௧ - 261)
 

தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும் (௨௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் (௨௱௬௰௧)
—மு. வரதராசன்

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். (௨௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும் (௨௱௬௰௧)
—மு. கருணாநிதி

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   (௨௱௬௰௨ - 262)
 

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே! (௨௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். (௨௱௬௰௨)
—மு. வரதராசன்

முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். (௨௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் (௨௱௬௰௨)
—மு. கருணாநிதி

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.   (௨௱௬௰௩ - 263)
 

துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்! (௨௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ (௨௱௬௰௩)
—மு. வரதராசன்

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். (௨௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது (௨௱௬௰௩)
—மு. கருணாநிதி

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.   (௨௱௬௰௪ - 264)
 

பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும் (௨௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். (௨௱௬௰௪)
—மு. வரதராசன்

பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும். (௨௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும் (௨௱௬௰௪)
—மு. கருணாநிதி

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   (௨௱௬௰௫ - 265)
 

வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும் (௨௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—மு. வரதராசன்

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். (௨௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும் (௨௱௬௰௫)
—மு. கருணாநிதி

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   (௨௱௬௰௬ - 266)
 

தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர் (௨௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. (௨௱௬௰௬)
—மு. வரதராசன்

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். (௨௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள் (௨௱௬௰௬)
—மு. கருணாநிதி

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   (௨௱௬௰௭ - 267)
 

சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும் (௨௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும் (௨௱௬௰௭)
—மு. வரதராசன்

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும். (௨௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள் (௨௱௬௰௭)
—மு. கருணாநிதி

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.   (௨௱௬௰௮ - 268)
 

‘தான்’ என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவவலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் (௨௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். (௨௱௬௰௮)
—மு. வரதராசன்

தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும். (௨௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும் (௨௱௬௰௮)
—மு. கருணாநிதி

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.   (௨௱௬௰௯ - 269)
 

தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும் (௨௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் (௨௱௬௰௯)
—மு. வரதராசன்

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். (௨௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள் (௨௱௬௰௯)
—மு. கருணாநிதி

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.   (௨௱௭௰ - 270)
 

உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான் (௨௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். (௨௱௭௰)
—மு. வரதராசன்

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். (௨௱௭௰)
—சாலமன் பாப்பையா

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான் (௨௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: நாட்டக் குறிஞ்சி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
மாதவமே மனிதனை உயர்த்தும்
மாநில மீதருள் வாழ்வினிலே பெறும்

அநுபல்லவி:
தீதவமென்பதில் திரிந்து கெடாமலே
திருவருளே பெற
ஒருமனதாய்க் கொள்ளும்

சரணம்:
தானமதில் உயர்வான தவமிது
தன் முயற்சிகொண்டே நாளும் தழைப்பது
ஞான ஒளிதர ஞாலத்துதித்தது
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தருவது

"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்" எனவே குறள்
பொன்னென வாழ்க்கையின் போதனையே தரும்
பூமியில் வேண்டிய யாவையும் தான் பெறும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22