இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.   (௮௱௫௰௧ - 851)
 

எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்’ என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள் (௮௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர். (௮௱௫௰௧)
—மு. வரதராசன்

எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர். (௮௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும் (௮௱௫௰௧)
—மு. கருணாநிதி

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.   (௮௱௫௰௨ - 852)
 

தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது! (௮௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும். (௮௱௫௰௨)
—மு. வரதராசன்

நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம். (௮௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும் (௮௱௫௰௨)
—மு. கருணாநிதி

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.   (௮௱௫௰௩ - 853)
 

‘மாறுபாடு’ என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கி விட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும் (௮௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும். (௮௱௫௰௩)
—மு. வரதராசன்

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும். (௮௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும் (௮௱௫௰௩)
—மு. கருணாநிதி

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௮௱௫௰௪ - 854)
 

‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும் (௮௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும். (௮௱௫௰௪)
—மு. வரதராசன்

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும். (௮௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும் (௮௱௫௰௪)
—மு. கருணாநிதி

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.   (௮௱௫௰௫ - 855)
 

தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர் (௮௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார். (௮௱௫௰௫)
—மு. வரதராசன்

தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்? (௮௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை (௮௱௫௰௫)
—மு. கருணாநிதி

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.   (௮௱௫௰௬ - 856)
 

‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும் (௮௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம். (௮௱௫௰௬)
—மு. வரதராசன்

பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம். (௮௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும் (௮௱௫௰௬)
—மு. கருணாநிதி

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.   (௮௱௫௰௭ - 857)
 

இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள் (௮௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார். (௮௱௫௰௭)
—மு. வரதராசன்

மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார். (௮௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள் (௮௱௫௰௭)
—மு. கருணாநிதி

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.   (௮௱௫௰௮ - 858)
 

தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும் (௮௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும். (௮௱௫௰௮)
—மு. வரதராசன்

மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும். (௮௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும் (௮௱௫௰௮)
—மு. கருணாநிதி

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.   (௮௱௫௰௯ - 859)
 

தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான் (௮௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான். (௮௱௫௰௯)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான். (௮௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான் (௮௱௫௰௯)
—மு. கருணாநிதி

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.   (௮௱௬௰ - 860)
 

‘மாறுபாடு’ என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும் (௮௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும். (௮௱௬௰)
—மு. வரதராசன்

மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும். (௮௱௬௰)
—சாலமன் பாப்பையா

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும் (௮௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்துஸ்தான் காப்பி  |  தாளம்: அடதாளம்
கண்ணிகள்:
கூடாமை எனும் தீய குணத்தை வளர்க்கும் நோயின்
கேடாகும் இகல் என்பதே - நண்பா
கேடாகும் இகல் என்பதே

மனத்தை மனம் பகைக்கும் மாறுபாட்டைக் கொடுக்கும்
இனத்தையும் கெடுக்கும் இகல் - நண்பா
இதை நீக்க வேண்டும் முதல்

இகல் என்னும் எவ்வ நோயை நீக்கின் அழிவில்லாத
புகழ் இன்பம் நிலையாய் வரும் - நண்பா
புவிச் செல்வம் யாவும் தரும்

இகல் எதிர் சாய்ந் தொழுக வல்லாரை யாவரே
மிகலூக்கும் தன்மையவர் - நண்பா
மேன்மையைக் காட்டும் குறள்

நட்பால் உண்டாகும் நல்ல நீதியின் பெருமிதம்
எப்போதும் துணையாய்க் கொள்வோம் - நண்பா
எல்லோர்க்கும் இனிதே செய்வோம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22