ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.   (௲௩௱௨௰௧ - 1321)
 

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும் (௲௩௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. (௲௩௱௨௰௧)
—மு. வரதராசன்

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல். (௲௩௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது (௲௩௱௨௰௧)
—மு. கருணாநிதி

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322)
 

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும் (௲௩௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். (௲௩௱௨௰௨)
—மு. வரதராசன்

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும். (௲௩௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும் (௲௩௱௨௰௨)
—மு. கருணாநிதி

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323)
 

நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ! (௲௩௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. (௲௩௱௨௰௩)
—மு. வரதராசன்

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ? (௲௩௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? (௲௩௱௨௰௩)
—மு. கருணாநிதி

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324)
 

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது (௲௩௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. (௲௩௱௨௰௪)
—மு. வரதராசன்

என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது. (௲௩௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது (௲௩௱௨௰௪)
—மு. கருணாநிதி

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.   (௲௩௱௨௰௫ - 1325)
 

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது (௲௩௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. (௲௩௱௨௰௫)
—மு. வரதராசன்

ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது. (௲௩௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது (௲௩௱௨௰௫)
—மு. கருணாநிதி

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.   (௲௩௱௨௰௬ - 1326)
 

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது! (௲௩௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. (௲௩௱௨௰௬)
—மு. வரதராசன்

உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது. (௲௩௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் (௲௩௱௨௰௬)
—மு. கருணாநிதி

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.   (௲௩௱௨௰௭ - 1327)
 

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும் (௲௩௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். (௲௩௱௨௰௭)
—மு. வரதராசன்

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம். (௲௩௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும் (௲௩௱௨௰௭)
—மு. கருணாநிதி

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.   (௲௩௱௨௰௮ - 1328)
 

நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ? (௲௩௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. (௲௩௱௨௰௮)
—மு. வரதராசன்

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா? (௲௩௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா? (௲௩௱௨௰௮)
—மு. கருணாநிதி

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329)
 

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக! (௲௩௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. (௲௩௱௨௰௯)
—மு. வரதராசன்

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். (௲௩௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக (௲௩௱௨௰௯)
—மு. கருணாநிதி

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330)
 

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும் (௲௩௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். (௲௩௱௩௰)
—மு. வரதராசன்

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே. (௲௩௱௩௰)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான் (௲௩௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சங்கராபரணம்  |  தாளம்: ஆதி
பல்லவி (தலைவி):
இல்லை தவறவர்க்கே ஆயினும் ஊடுதல்
வல்லத வரளிக்கும் ஆறு நான் பெற்ற பெரும் பேறு

அநுபல்லவி (தலைவி):
எல்லையில் நின்றூடலில் தோன்றும் சிறு துணி
நல்லளி வாடினும் பாடு பெறும் என்தோழி

சரணம் (தலைவி):
நிலமும் நீரும் பொருந்திக் கலந்தது போலும் அன்பு
நிறைந்த என் காதலர்பால் உடுத்ற் கிணையு முண்டோ
நலம் பெறப் புல்லிவிடாப் புலவியுள் தோன்றுமே
நாயகி என்னுள்ளத்தை உடைக்கும் படையுமாமே

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: மத்தியமாவதி  |  தாளம்: ஆதி
பல்லவி (தலைவன்):
ஊடல் உவகை கொண்டேனே
உணவினும் உண்டதறல் இனிதாகவே

அநுபல்லவி (தலைவன்):
ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும்
கூடலில் காணப்படும் எனவே என்னும்

சரணம் (தலைவன்):
இன்னும் வேண்ட அவள் ஊடுதல் வேண்டும்
இரவு காலமும் நீடுதல் வேண்டும்
நன்னுதல் ஊடுதல் காமத்திற் கின்பம்
நாடும் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்



பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22