நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்   (௲௧ - 1001)
 

வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான் (௲௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. (௲௧)
—மு. வரதராசன்

தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே. (௲௧)
—சாலமன் பாப்பையா

அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? (௲௧)
—மு. கருணாநிதி

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௲௨ - 1002)
 

‘பொருளினால் எல்லாமே உண்டாகும்’ என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும் (௲௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம். (௲௨)
—மு. வரதராசன்

பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும். (௲௨)
—சாலமன் பாப்பையா

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான் (௲௨)
—மு. கருணாநிதி

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003)
 

மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை (௲௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும். (௲௩)
—மு. வரதராசன்

மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே. (௲௩)
—சாலமன் பாப்பையா

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும் (௲௩)
—மு. கருணாநிதி

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.   (௲௪ - 1004)
 

ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ? (௲௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே. (௲௪)
—மு. வரதராசன்

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்? (௲௪)
—சாலமன் பாப்பையா

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? (௲௪)
—மு. கருணாநிதி

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.   (௲௫ - 1005)
 

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை (௲௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை. (௲௫)
—மு. வரதராசன்

தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும். (௲௫)
—சாலமன் பாப்பையா

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை (௲௫)
—மு. கருணாநிதி

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.   (௲௬ - 1006)
 

தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான் (௲௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான். (௲௬)
—மு. வரதராசன்

தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே. (௲௬)
—சாலமன் பாப்பையா

தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான் (௲௬)
—மு. கருணாநிதி

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.   (௲௭ - 1007)
 

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம் (௲௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது. (௲௭)
—மு. வரதராசன்

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம். (௲௭)
—சாலமன் பாப்பையா

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது (௲௭)
—மு. கருணாநிதி

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (௲௮ - 1008)
 

வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும் (௲௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது. (௲௮)
—மு. வரதராசன்

எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம். (௲௮)
—சாலமன் பாப்பையா

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! (௲௮)
—மு. கருணாநிதி

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.   (௲௯ - 1009)
 

உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர் தாம் கொண்டு போவார்கள் (௲௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே. (௲௯)
—மு. வரதராசன்

பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர். (௲௯)
—சாலமன் பாப்பையா

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர் (௲௯)
—மு. கருணாநிதி

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.   (௲௰ - 1010)
 

புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே (௲௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது. (௲௰)
—மு. வரதராசன்

பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம். (௲௰)
—சாலமன் பாப்பையா

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும் (௲௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: அட்டாணா  |  தாளம்: ஆதி
பல்லவி:
நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்

அநுபல்லவி:
குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்

சரணம்:
எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்

வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22