வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661)
 

மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா (௬௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. (௬௱௬௰௧)
—மு. வரதராசன்

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா. (௬௱௬௰௧)
—சாலமன் பாப்பையா

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது (௬௱௬௰௧)
—மு. கருணாநிதி

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662)
 

ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும் (௬௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம். (௬௱௬௰௨)
—மு. வரதராசன்

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர். (௬௱௬௰௨)
—சாலமன் பாப்பையா

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம் (௬௱௬௰௨)
—மு. கருணாநிதி

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663)
 

செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும் (௬௱௬௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (௬௱௬௰௩)
—மு. வரதராசன்

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும். (௬௱௬௰௩)
—சாலமன் பாப்பையா

செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும் இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும் (௬௱௬௰௩)
—மு. கருணாநிதி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664)
 

‘இதனை இப்படி யிப்படிச் செய்வோம்’ என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும் (௬௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம். (௬௱௬௰௪)
—மு. வரதராசன்

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம். (௬௱௬௰௪)
—சாலமன் பாப்பையா

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம் (௬௱௬௰௪)
—மு. கருணாநிதி

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.   (௬௱௬௰௫ - 665)
 

எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும் (௬௱௬௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். (௬௱௬௰௫)
—மு. வரதராசன்

எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும். (௬௱௬௰௫)
—சாலமன் பாப்பையா

செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும் (௬௱௬௰௫)
—மு. கருணாநிதி

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666)
 

ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள் (௬௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். (௬௱௬௰௬)
—மு. வரதராசன்

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார். (௬௱௬௰௬)
—சாலமன் பாப்பையா

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் (௬௱௬௰௬)
—மு. கருணாநிதி

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667)
 

உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது (௬௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது. (௬௱௬௰௭)
—மு. வரதராசன்

அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது. (௬௱௬௰௭)
—சாலமன் பாப்பையா

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் (௬௱௬௰௭)
—மு. கருணாநிதி

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668)
 

மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும் (௬௱௬௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௮)
—மு. வரதராசன்

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. (௬௱௬௰௮)
—சாலமன் பாப்பையா

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் (௬௱௬௰௮)
—மு. கருணாநிதி

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669)
 

முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும் (௬௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௯)
—மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க. (௬௱௬௰௯)
—சாலமன் பாப்பையா

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும் (௬௱௬௰௯)
—மு. கருணாநிதி

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670)
 

எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது (௬௱௭௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. (௬௱௭௰)
—மு. வரதராசன்

எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார். (௬௱௭௰)
—சாலமன் பாப்பையா

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது (௬௱௭௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்துஸ்தான்பியாக்  |  தாளம்: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22