புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.   (௲௨௱௮௰௧ - 1281)
 

நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு (௲௨௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு (௲௨௱௮௰௧)
—மு. வரதராசன்

நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு. (௲௨௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம் (௲௨௱௮௰௧)
—மு. கருணாநிதி

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.   (௲௨௱௮௰௨ - 1282)
 

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும் (௲௨௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். (௲௨௱௮௰௨)
—மு. வரதராசன்

பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும். (௲௨௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும் (௲௨௱௮௰௨)
—மு. கருணாநிதி

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.   (௲௨௱௮௰௩ - 1283)
 

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே! (௲௨௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை. (௲௨௱௮௰௩)
—மு. வரதராசன்

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை. (௲௨௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை (௲௨௱௮௰௩)
—மு. கருணாநிதி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.   (௲௨௱௮௰௪ - 1284)
 

தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே! (௲௨௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது. (௲௨௱௮௰௪)
—மு. வரதராசன்

தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது. (௲௨௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு (௲௨௱௮௰௪)
—மு. கருணாநிதி

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.   (௲௨௱௮௰௫ - 1285)
 

மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே! (௲௨௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன். (௲௨௱௮௰௫)
—மு. வரதராசன்

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன். (௲௨௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன் (௲௨௱௮௰௫)
—மு. கருணாநிதி

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.   (௲௨௱௮௰௬ - 1286)
 

என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன் (௲௨௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை. (௲௨௱௮௰௬)
—மு. வரதராசன்

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன். (௲௨௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை (௲௨௱௮௰௬)
—மு. கருணாநிதி

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.   (௲௨௱௮௰௭ - 1287)
 

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன? (௲௨௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ? (௲௨௱௮௰௭)
—மு. வரதராசன்

தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன? (௲௨௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன? (௲௨௱௮௰௭)
—மு. கருணாநிதி

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.   (௲௨௱௮௰௮ - 1288)
 

கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே! (௲௨௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு. (௲௨௱௮௰௮)
—மு. வரதராசன்

வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான். (௲௨௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு (௲௨௱௮௰௮)
—மு. கருணாநிதி

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.   (௲௨௱௮௰௯ - 1289)
 

அனிச்சமலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலரே யாவர் (௲௨௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே. (௲௨௱௮௰௯)
—மு. வரதராசன்

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே (௲௨௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள் (௲௨௱௮௰௯)
—மு. கருணாநிதி

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.   (௲௨௱௯௰ - 1290)
 

கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள் (௲௨௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள். (௲௨௱௯௰)
—மு. வரதராசன்

தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள் (௲௨௱௯௰)
—சாலமன் பாப்பையா

விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள் (௲௨௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தேசு  |  தாளம்: ஆதி
பல்லவி:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு - தோழி
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

அநுபல்லவி:
வெள்ளம் போல் புணர்ச்சி விதும்பலே நாடும்
வீணையும் நாதமுமாய் இழைந் தொன்று கூடும்

சரணம்:
பழுது பலவும் எண்ணி ஊடலாம் என்று சென்றேன்
பாங்கியே அதுமறந்து கூடலைத்தான் கண்டேன்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து நான் என்ன சொல்வேன்

போதுவாய் திறந்திடும் போதே பறந்து வரும்
பூம்பொறி வண்டினமும் அமர்ந்து தண்டேன் நுகரும்
ஈதுரை மலரினும் மெல்லிது காமம்
எனவே சிலர்தான் அதன் செல்வி தலைப்படுவார்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22