இராகம்: பைரவி | தாளம்: ஆதி பல்லவி:பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்
அநுபல்லவி:அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி
சரணம்:புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்
தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்