வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும்; செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும் (௬௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும். (௬௱௫௰௧)
—மு. வரதராசன்

நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும். (௬௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும் (௬௱௫௰௧)
—மு. கருணாநிதி

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும் (௬௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். (௬௱௫௰௨)
—மு. வரதராசன்

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும். (௬௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும் (௬௱௫௰௨)
—மு. கருணாநிதி

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும் (௬௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். (௬௱௫௰௩)
—மு. வரதராசன்

உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். (௬௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் (௬௱௫௰௩)
—மு. கருணாநிதி

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள் (௬௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார். (௬௱௫௰௪)
—மு. வரதராசன்

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார். (௬௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள் (௬௱௫௰௪)
—மு. கருணாநிதி

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

‘என்ன செய்தோம்’ என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று (௬௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. (௬௱௫௰௫)
—மு. வரதராசன்

என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது. (௬௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று (௬௱௫௰௫)
—மு. கருணாநிதி

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது (௬௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. (௬௱௫௰௬)
—மு. வரதராசன்

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக. (௬௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது (௬௱௫௰௬)
—மு. கருணாநிதி

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும் (௬௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது. (௬௱௫௰௭)
—மு. வரதராசன்

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது. (௬௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும் (௬௱௫௰௭)
—மு. கருணாநிதி

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும் (௬௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். (௬௱௫௰௮)
—மு. வரதராசன்

வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும். (௬௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் (௬௱௫௰௮)
—மு. கருணாநிதி

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும் (௬௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும் (௬௱௫௰௯)
—மு. வரதராசன்

பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும். (௬௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும் (௬௱௫௰௯)
—மு. கருணாநிதி

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும் (௬௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது. (௬௱௬௰)
—மு. வரதராசன்

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம். (௬௱௬௰)
—சாலமன் பாப்பையா

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான் (௬௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: பைரவி  |  தாளம்: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22