புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.   (௲௩௱௧ - 1301)
 

நாம் ஊடும் போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர் பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக (௲௩௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. (௲௩௱௧)
—மு. வரதராசன்

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய். (௲௩௱௧)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக (௲௩௱௧)
—மு. கருணாநிதி

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.   (௲௩௱௨ - 1302)
 

உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டுவிடும் (௲௩௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. (௲௩௱௨)
—மு. வரதராசன்

உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும். (௲௩௱௨)
—சாலமன் பாப்பையா

ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும் (௲௩௱௨)
—மு. கருணாநிதி

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.   (௲௩௱௩ - 1303)
 

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்! (௲௩௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. (௲௩௱௩)
—மு. வரதராசன்

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம். (௲௩௱௩)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் (௲௩௱௩)
—மு. கருணாநிதி

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.   (௲௩௱௪ - 1304)
 

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும் (௲௩௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. (௲௩௱௪)
—மு. வரதராசன்

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம். (௲௩௱௪)
—சாலமன் பாப்பையா

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும் (௲௩௱௪)
—மு. கருணாநிதி

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.   (௲௩௱௫ - 1305)
 

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும் (௲௩௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். (௲௩௱௫)
—மு. வரதராசன்

நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே. (௲௩௱௫)
—சாலமன் பாப்பையா

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும் (௲௩௱௫)
—மு. கருணாநிதி

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.   (௲௩௱௬ - 1306)
 

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும் (௲௩௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். (௲௩௱௬)
—மு. வரதராசன்

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும். (௲௩௱௬)
—சாலமன் பாப்பையா

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும் (௲௩௱௬)
—மு. கருணாநிதி

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.   (௲௩௱௭ - 1307)
 

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும் (௲௩௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. (௲௩௱௭)
—மு. வரதராசன்

இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு. (௲௩௱௭)
—சாலமன் பாப்பையா

கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு (௲௩௱௭)
—மு. கருணாநிதி

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி.   (௲௩௱௮ - 1308)
 

‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்? (௲௩௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? (௲௩௱௮)
—மு. வரதராசன்

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்? (௲௩௱௮)
—சாலமன் பாப்பையா

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்? (௲௩௱௮)
—மு. கருணாநிதி

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.   (௲௩௱௯ - 1309)
 

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும் (௲௩௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. (௲௩௱௯)
—மு. வரதராசன்

நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது. (௲௩௱௯)
—சாலமன் பாப்பையா

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும் (௲௩௱௯)
—மு. கருணாநிதி

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.   (௲௩௱௰ - 1310)
 

ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும் (௲௩௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. (௲௩௱௰)
—மு. வரதராசன்

ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே. (௲௩௱௰)
—சாலமன் பாப்பையா

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம் (௲௩௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆரபி  |  தாளம்: ஆதி
பல்லவி:
புல்லாதிராப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்பம் சிறிது

அநுபல்லவி:
நல்லார்க்கிது நல்ல பாடம்
நாயகியாள் ஆட்சி பீடம்
வல்லாண்மையும் வளைந்து கொடுக்கும்
வாயிலில் கையேந்தி நிற்கும்

சரணம்:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்றே அதுவாகும்
இனிதாகிய நீரும் நிழலும் போல்
இணைந்தவர் ஊடலே இங்கிதம் காண்பதால்

ஊடல் உணவில் சேர் உப்பினைப் போன்றது
உள்ள அளவினில் மீறிக் கூடாதது
நீடலாமோ தலைவி! ...... புலவி
நேரம் அறிந்து செல் சாரம் அறிந்துகொள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22