சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.   (௫௱௨௰௧ - 521)
 

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும் (௫௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. (௫௱௨௰௧)
—மு. வரதராசன்

ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு. (௫௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள் (௫௱௨௰௧)
—மு. கருணாநிதி

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.   (௫௱௨௰௨ - 522)
 

அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும் (௫௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். (௫௱௨௰௨)
—மு. வரதராசன்

ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (௫௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும் (௫௱௨௰௨)
—மு. கருணாநிதி

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.   (௫௱௨௰௩ - 523)
 

சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும் (௫௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. (௫௱௨௰௩)
—மு. வரதராசன்

சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது. (௫௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும் (௫௱௨௰௩)
—மு. கருணாநிதி

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.   (௫௱௨௰௪ - 524)
 

சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும் (௫௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். (௫௱௨௰௪)
—மு. வரதராசன்

தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும். (௫௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும் (௫௱௨௰௪)
—மு. கருணாநிதி

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.   (௫௱௨௰௫ - 525)
 

சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான் (௫௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். (௫௱௨௰௫)
—மு. வரதராசன்

ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான். (௫௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள் (௫௱௨௰௫)
—மு. கருணாநிதி

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.   (௫௱௨௰௬ - 526)
 

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை (௫௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. (௫௱௨௰௬)
—மு. வரதராசன்

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை. (௫௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம் (௫௱௨௰௬)
—மு. கருணாநிதி

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.   (௫௱௨௰௭ - 527)
 

காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும் (௫௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. (௫௱௨௰௭)
—மு. வரதராசன்

காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும். (௫௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு (௫௱௨௰௭)
—மு. கருணாநிதி

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.   (௫௱௨௰௮ - 528)
 

எல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது (௫௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். (௫௱௨௰௮)
—மு. வரதராசன்

சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர். (௫௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர் (௫௱௨௰௮)
—மு. கருணாநிதி

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.   (௫௱௨௰௯ - 529)
 

சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள் (௫௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். (௫௱௨௰௯)
—மு. வரதராசன்

முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர். (௫௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள் (௫௱௨௰௯)
—மு. கருணாநிதி

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.   (௫௱௩௰ - 530)
 

காரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும் (௫௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும். (௫௱௩௰)
—மு. வரதராசன்

ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க. (௫௱௩௰)
—சாலமன் பாப்பையா

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும் (௫௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: தேசிகதோடி  |  தாளம்: அடதாளம்
கண்ணிகள்:
குற்றம் இல்லாதது சுற்றம் தழாலது
உற்றதாம் முன்னே சோல - ஒரு
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்
நிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல
உரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்
உறையுமா செல்வம் இங்கே.

கரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்
கருத்துடனே அழைக்கும் - இனம்
மறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்
மாநிலத்தில் தழைக்கும்

சினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்
செல்வம் திருக்குறளே - இதில்
மனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்
வாழும் இடம் இருளே.

பூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே
பூமியில் நிற்கும் மரம் - செல்வர்
ஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே
என்பதைக் காட்டும் திரம்.




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22