அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.   (௲௱௪௰௧ - 1141)
 

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அ·து என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள் (௲௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர். (௲௱௪௰௧)
—மு. வரதராசன்

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம். (௲௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள் (௲௱௪௰௧)
—மு. கருணாநிதி

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.   (௲௱௪௰௨ - 1142)
 

குவளை மலரைப் போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே! (௲௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். (௲௱௪௰௨)
—மு. வரதராசன்

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது. (௲௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது (௲௱௪௰௨)
—மு. கருணாநிதி

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.   (௲௱௪௰௩ - 1143)
 

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன் (௲௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. (௲௱௪௰௩)
—மு. வரதராசன்

எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று. (௲௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே! (௲௱௪௰௩)
—மு. கருணாநிதி

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.   (௲௱௪௰௪ - 1144)
 

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே! (௲௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். (௲௱௪௰௪)
—மு. வரதராசன்

ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும். (௲௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும் (௲௱௪௰௪)
—மு. கருணாநிதி

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.   (௲௱௪௰௫ - 1145)
 

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையாகின்றது (௲௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது. (௲௱௪௰௫)
—மு. வரதராசன்

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது. (௲௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும் (௲௱௪௰௫)
—மு. கருணாநிதி

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.   (௲௱௪௰௬ - 1146)
 

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே (௲௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. (௲௱௪௰௬)
—மு. வரதராசன்

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே! (௲௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது (௲௱௪௰௬)
—மு. கருணாநிதி

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.   (௲௱௪௰௭ - 1147)
 

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது (௲௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது. (௲௱௪௰௭)
—மு. வரதராசன்

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும். (௲௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது (௲௱௪௰௭)
—மு. கருணாநிதி

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.   (௲௱௪௰௮ - 1148)
 

‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும் (௲௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. (௲௱௪௰௮)
—மு. வரதராசன்

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம். (௲௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும் (௲௱௪௰௮)
—மு. கருணாநிதி

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.   (௲௱௪௰௯ - 1149)
 

‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ! (௲௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ. (௲௱௪௰௯)
—மு. வரதராசன்

அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா? (௲௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா? (௲௱௪௰௯)
—மு. கருணாநிதி

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.   (௲௱௫௰ - 1150)
 

யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார் (௲௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார். (௲௱௫௰)
—மு. வரதராசன்

நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார். (௲௱௫௰)
—சாலமன் பாப்பையா

யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார் (௲௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சாருகேசி  |  தாளம்: ஆதி
பல்லவி:
அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்

அநுபல்லவி:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!

சரணம்:
ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்

தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22