மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.   (௬௱௯௰௧ - 691)
 

மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும் (௬௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். (௬௱௯௰௧)
—மு. வரதராசன்

மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக. (௬௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள் (௬௱௯௰௧)
—மு. கருணாநிதி

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.   (௬௱௯௰௨ - 692)
 

மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும் (௬௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். (௬௱௯௰௨)
—மு. வரதராசன்

ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும். (௬௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும் (௬௱௯௰௨)
—மு. கருணாநிதி

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.   (௬௱௯௰௩ - 693)
 

அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும் (௬௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. (௬௱௯௰௩)
—மு. வரதராசன்

ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம். (௬௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல (௬௱௯௰௩)
—மு. கருணாநிதி

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.   (௬௱௯௰௪ - 694)
 

அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும் (௬௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். (௬௱௯௰௪)
—மு. வரதராசன்

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க. (௬௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும் (௬௱௯௰௪)
—மு. கருணாநிதி

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.   (௬௱௯௰௫ - 695)
 

அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும் (௬௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். (௬௱௯௰௫)
—மு. வரதராசன்

ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க. (௬௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும் (௬௱௯௰௫)
—மு. கருணாநிதி

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.   (௬௱௯௰௬ - 696)
 

அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். (௬௱௯௰௬)
—மு. வரதராசன்

ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக. (௬௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
—மு. கருணாநிதி

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.   (௬௱௯௰௭ - 697)
 

அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதன பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும் (௬௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும். (௬௱௯௰௭)
—மு. வரதராசன்

ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக. (௬௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும் (௬௱௯௰௭)
—மு. கருணாநிதி

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.   (௬௱௯௰௮ - 698)
 

‘இளையவர்’ என்று கருதியோ, ‘இனமுறை’ என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும் (௬௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும். (௬௱௯௰௮)
—மு. வரதராசன்

ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக. (௬௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் (௬௱௯௰௮)
—மு. கருணாநிதி

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.   (௬௱௯௰௯ - 699)
 

‘தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்’ என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
—மு. வரதராசன்

சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். (௬௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் (௬௱௯௰௯)
—மு. கருணாநிதி

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.   (௭௱ - 700)
 

‘மிகப் பழைய காலத் தொடர்புடையோர்’ என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும் (௭௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும். (௭௱)
—மு. வரதராசன்

ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும். (௭௱)
—சாலமன் பாப்பையா

நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும் (௭௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: செஞ்சுருட்டி  |  தாளம்: ஆதி
கண்ணிகள்:
மன்னர் தம்மைச் சேர்ந்தொழுகும் சேவை - இது
மாநில அமைச்சருக்குத் தேவை - சொல்லின்
அன்னவர் குறிப்பறிந்தே ஆகும் காலமும் தெரிந்தே
ஆற்றும் வினை போற்றும்

மன்னவர் விழைப விழையாமை - பாரில்
மன்னிய ஆக்கம் தரும் மேன்மை - மேலும்
தன்னினம் இளையர் முறை என்னினும் இகழ்ந்திடாமல்
தலைமை ஏத்தும் நிலைமை

ஒட்டுக் கேட்பதாலே வரும் தீது - மனம்
விட்டுச் சொன்னால் கேட்கலாம் அப்போது - தம்மை
ஒப்புக் கொள்ளப் பட்டாலுமே எப்பொழுதும் மாறில்லாத
உண்மை மனத் திண்மை

ஆன்ற பெரியோரகத்து வாசம் - பெற்றே
அரியவை போற்றின் மிகும் நேசம்
சேர்ந்த நகையும் செவிச் சொல்லுமே அவித்தொழுகத்
தேறும் நலம் கோரும்

அகலாமல் அணுகாமல் இருந்தே - மிக்க
ஆவலுடன் தீக்காய்வார் போல் அமைந்தே - என்றும்
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகப் புகலும் நடைபழக
ஏற்கும் குறள் நோக்கும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22