குற்றங்கூறாமை

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.   (௪௱௩௰௧ - 431)
 

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும் (௪௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும். (௪௱௩௰௧)
—மு. வரதராசன்

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது. (௪௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும் (௪௱௩௰௧)
—மு. கருணாநிதி

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (௪௱௩௰௨ - 432)
 

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும் (௪௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும். (௪௱௩௰௨)
—மு. வரதராசன்

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம். (௪௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும் (௪௱௩௰௨)
—மு. கருணாநிதி

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (௪௱௩௰௩ - 433)
 

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள் (௪௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர். (௪௱௩௰௩)
—மு. வரதராசன்

பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர். (௪௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள் (௪௱௩௰௩)
—மு. கருணாநிதி

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (௪௱௩௰௪ - 434)
 

தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க (௪௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். (௪௱௩௰௪)
—மு. வரதராசன்

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும். (௪௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் (௪௱௩௰௪)
—மு. கருணாநிதி

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (௪௱௩௰௫ - 435)
 

குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும் (௪௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும். (௪௱௩௰௫)
—மு. வரதராசன்

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும். (௪௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் (௪௱௩௰௫)
—மு. கருணாநிதி

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (௪௱௩௰௬ - 436)
 

தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்? (௪௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். (௪௱௩௰௬)
—மு. வரதராசன்

முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது! (௪௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? (௪௱௩௰௬)
—மு. கருணாநிதி

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (௪௱௩௰௭ - 437)
 

செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் (௪௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். (௪௱௩௰௭)
—மு. வரதராசன்

செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும். (௪௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும் (௪௱௩௰௭)
—மு. கருணாநிதி

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (௪௱௩௰௮ - 438)
 

செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும் (௪௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். (௪௱௩௰௮)
—மு. வரதராசன்

செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும். (௪௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் (௪௱௩௰௮)
—மு. கருணாநிதி

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (௪௱௩௰௯ - 439)
 

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது (௪௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. (௪௱௩௰௯)
—மு. வரதராசன்

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே. (௪௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது (௪௱௩௰௯)
—மு. கருணாநிதி

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (௪௱௪௰ - 440)
 

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும் (௪௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். (௪௱௪௰)
—மு. வரதராசன்

தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும். (௪௱௪௰)
—சாலமன் பாப்பையா

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் (௪௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: அட்டாணா  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
ஓடிப் போ! போ! குற்றமே! நீ
ஓடிப் போய் விடுவாய்
ஒரு நொடியும் நிற்காதே
மறுபடி கால் வைக்காதே

அநுபல்லவி:
தேடிப்பெற்ற அறிவுச் செல்வம்
தேர்ந்த மக்கள் ஆட்சிச் செல்வம்
கூடி வாழும் நேரத்திலே
குற்றமே நீ உட் புகுந்தால்
கொன்றிடுவோம் கூரம்பால்

சரணம்:
அழவைத் தரும் பகையாய் வரும் குற்றமே
அறியாமை கல்லாமை ஈயாமை குற்றமே
வழிவிட்டுத் தன்புகழ் பேசிடும் குற்றமே
மான முறை கெட்டாயே
மாய வலைப் பட்டாயே

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்திடும் தூறுபோல் கெடும் எனவே மன்னர்
பெறுமதி கொள்ளவே பேசும் திருக்குறள்
பெரியாரின் துணை கண்டோம்
பிழை பட்டாய் உனை வேண்டோம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22