பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.   (௪௱௪௰௧ - 441)
 

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். (௪௱௪௰௧)
—மு. வரதராசன்

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. (௪௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் (௪௱௪௰௧)
—மு. கருணாநிதி

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.   (௪௱௪௰௨ - 442)
 

நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். (௪௱௪௰௨)
—மு. வரதராசன்

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக. (௪௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் (௪௱௪௰௨)
—மு. கருணாநிதி

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.   (௪௱௪௰௩ - 443)
 

பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும் (௪௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். (௪௱௪௰௩)
—மு. வரதராசன்

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது. (௪௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் (௪௱௪௰௩)
—மு. கருணாநிதி

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் த   (௪௱௪௰௪ - 444)
 

தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும் (௪௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (௪௱௪௰௪)
—மு. வரதராசன்

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும். (௪௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும் (௪௱௪௰௪)
—மு. கருணாநிதி

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (௪௱௪௰௫ - 445)
 

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். (௪௱௪௰௫)
—மு. வரதராசன்

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க. (௪௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும் (௪௱௪௰௫)
—மு. கருணாநிதி

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.   (௪௱௪௰௬ - 446)
 

தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை (௪௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை. (௪௱௪௰௬)
—மு. வரதராசன்

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது. (௪௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது (௪௱௪௰௬)
—மு. கருணாநிதி

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.   (௪௱௪௰௭ - 447)
 

இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? (௪௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர். (௪௱௪௰௭)
—மு. வரதராசன்

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்? (௪௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? (௪௱௪௰௭)
—மு. கருணாநிதி

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.   (௪௱௪௰௮ - 448)
 

இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான் (௪௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். (௪௱௪௰௮)
—மு. வரதராசன்

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும். (௪௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் (௪௱௪௰௮)
—மு. கருணாநிதி

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.   (௪௱௪௰௯ - 449)
 

முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை (௪௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. (௪௱௪௰௯)
—மு. வரதராசன்

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை. (௪௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும் (௪௱௪௰௯)
—மு. கருணாநிதி

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.   (௪௱௫௰ - 450)
 

பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும் (௪௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். (௪௱௫௰)
—மு. வரதராசன்

துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும். (௪௱௫௰)
—சாலமன் பாப்பையா

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் (௪௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சங்கராபரணம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
பெரியாரைத் துணைக் கொள்ளுவோம்
பெற்ற தன்னாட்சி நலம்
பெற்றிடவே என்றும்

அநுபல்லவி:
அரிய வற்று ளெல்லாம் அரியதாம் இனியதாம்
அரண் படை பொருள் வன்மை
யாவினும் மேலதாம்

சரணம்:
ஆலமரத்தினடி விழுதுகள் போலும்
அழகுமணி மண்டபத் தூண்களைப் போலும்
காலத்தில் தாங்கும் நல்ல பிள்ளைகள் போலும்
காக்கும் நன்றாகவே நோக்கும் கண்ணாகவே

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள்ளலின் மேன்மை
குறளரி வூட்டும் நல்லார் தொடர்கைவிடாது
கோரும் நன்மைகள் எல்லாம் சேரும் தப்பாது




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22