சொல்வன்மை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641)
 

நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும் (௬௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று. (௬௱௪௰௧)
—மு. வரதராசன்

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். (௬௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் (௬௱௪௰௧)
—மு. கருணாநிதி

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642)
 

மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும் (௬௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் (௬௱௪௰௨)
—மு. வரதராசன்

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக. (௬௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும் (௬௱௪௰௨)
—மு. கருணாநிதி

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643)
 

கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும் (௬௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும். (௬௱௪௰௩)
—மு. வரதராசன்

நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்) (௬௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும் (௬௱௪௰௩)
—மு. கருணாநிதி

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644)
 

கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை (௬௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை. (௬௱௪௰௪)
—மு. வரதராசன்

எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை. (௬௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை (௬௱௪௰௪)
—மு. கருணாநிதி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (௬௱௪௰௫ - 645)
 

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும் (௬௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும். (௬௱௪௰௫)
—மு. வரதராசன்

தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. (௬௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் (௬௱௪௰௫)
—மு. கருணாநிதி

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646)
 

தாம் சொல்லும் போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும் போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை (௬௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். (௬௱௪௰௬)
—மு. வரதராசன்

பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை. (௬௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும் (௬௱௪௰௬)
—மு. கருணாநிதி

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647)
 

சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும் (௬௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது. (௬௱௪௰௭)
—மு. வரதராசன்

தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே. (௬௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது (௬௱௪௰௭)
—மு. கருணாநிதி

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (௬௱௪௰௮ - 648)
 

கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும் (௬௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும். (௬௱௪௰௮)
—மு. வரதராசன்

சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும். (௬௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள் (௬௱௪௰௮)
—மு. கருணாநிதி

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649)
 

குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள் (௬௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர். (௬௱௪௰௯)
—மு. வரதராசன்

குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர். (௬௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள் (௬௱௪௰௯)
—மு. கருணாநிதி

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650)
 

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர் (௬௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். (௬௱௫௰)
—மு. வரதராசன்

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர். (௬௱௫௰)
—சாலமன் பாப்பையா

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர் (௬௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சண்முகப்பிரியா  |  தாளம்: ஆதி
பல்லவி:
சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே

அநுபல்லவி:
வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்

சரணம்:
ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22