வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.   (௪௱௭௰௧ - 471)
 

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும் (௪௱௭௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். (௪௱௭௰௧)
—மு. வரதராசன்

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க. (௪௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும் (௪௱௭௰௧)
—மு. கருணாநிதி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்   (௪௱௭௰௨ - 472)
 

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை (௪௱௭௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. (௪௱௭௰௨)
—மு. வரதராசன்

தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை. (௪௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை (௪௱௭௰௨)
—மு. கருணாநிதி

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   (௪௱௭௰௩ - 473)
 

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்து போனவர்கள் உலகிற் பலராவர் (௪௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர். (௪௱௭௰௩)
—மு. வரதராசன்

தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர். (௪௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு (௪௱௭௰௩)
—மு. கருணாநிதி

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   (௪௱௭௰௪ - 474)
 

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான் (௪௱௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். (௪௱௭௰௪)
—மு. வரதராசன்

பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான். (௪௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள் (௪௱௭௰௪)
—மு. கருணாநிதி

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.   (௪௱௭௰௫ - 475)
 

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும் (௪௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். (௪௱௭௰௫)
—மு. வரதராசன்

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும். (௪௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும் (௪௱௭௰௫)
—மு. கருணாநிதி

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.   (௪௱௭௰௬ - 476)
 

மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும் (௪௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். (௪௱௭௰௬)
—மு. வரதராசன்

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும். (௪௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார் (௪௱௭௰௬)
—மு. கருணாநிதி

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.   (௪௱௭௰௭ - 477)
 

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும் (௪௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும். (௪௱௭௰௭)
—மு. வரதராசன்

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். (௪௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும் (௪௱௭௰௭)
—மு. கருணாநிதி

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (௪௱௭௰௮ - 478)
 

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை (௪௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. (௪௱௭௰௮)
—மு. வரதராசன்

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. (௪௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை (௪௱௭௰௮)
—மு. கருணாநிதி

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.   (௪௱௭௰௯ - 479)
 

தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும் (௪௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். (௪௱௭௰௯)
—மு. வரதராசன்

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும். (௪௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும் (௪௱௭௰௯)
—மு. கருணாநிதி

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.   (௪௱௮௰ - 480)
 

தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும் (௪௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். (௪௱௮௰)
—மு. வரதராசன்

பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும். (௪௱௮௰)
—சாலமன் பாப்பையா

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும் (௪௱௮௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சக்கரவாகம்  |  தாளம்: ஆதி
பல்லவி:
உச்சியில் நுனிக் கொம்பில் ஏறிடலாமா?
உள்ள அளவில் மீறிச் செலவிடலாமா?

அநுபல்லவி:
அச்சு முறிந்தால் வண்டி நகருமோ தம்பி
அழகு மயிலிறகும் அதிகம் ஏற்றாதே நம்பி

சரணம்:
தன்வலி பகைவலி சார்ந்திடும் துணைவலி
தான்புகும் வினைவலி யாவையும் பார்சரி
உன்வலி மிகும் என்றால் அடுபோர் தொடங்கு
ஒடியும் இடையில் என்றால் உரம் கொள்ளவே அடங்கு

ஆற்றின் அளவறிந்தே ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி என்பதே திருக்குறள்
ஏற்றிடச் செய்யும் இதே ஒப்புரவாண்மை
என்றும் குன்றாத மக்களாட்சியின் மேன்மை




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22