வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்.   (௩௱௧ - 301)
 

தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன? (௩௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன? (௩௱௧)
—மு. வரதராசன்

எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன? (௩௱௧)
—சாலமன் பாப்பையா

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? (௩௱௧)
—மு. கருணாநிதி

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.   (௩௱௨ - 302)
 

செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும் (௩௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. (௩௱௨)
—மு. வரதராசன்

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை. (௩௱௨)
—சாலமன் பாப்பையா

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை (௩௱௨)
—மு. கருணாநிதி

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.   (௩௱௩ - 303)
 

எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும் (௩௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். (௩௱௩)
—மு. வரதராசன்

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக. (௩௱௩)
—சாலமன் பாப்பையா

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும் (௩௱௩)
—மு. கருணாநிதி

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.   (௩௱௪ - 304)
 

முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ? (௩௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ? (௩௱௪)
—மு. வரதராசன்

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ? (௩௱௪)
—சாலமன் பாப்பையா

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் (௩௱௪)
—மு. கருணாநிதி

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.   (௩௱௫ - 305)
 

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும் (௩௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும். (௩௱௫)
—மு. வரதராசன்

தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும். (௩௱௫)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும் (௩௱௫)
—மு. கருணாநிதி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.   (௩௱௬ - 306)
 

சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும் (௩௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். (௩௱௬)
—மு. வரதராசன்

சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும். (௩௱௬)
—சாலமன் பாப்பையா

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும் (௩௱௬)
—மு. கருணாநிதி

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.   (௩௱௭ - 307)
 

சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும் (௩௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும். (௩௱௭)
—மு. வரதராசன்

நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது. (௩௱௭)
—சாலமன் பாப்பையா

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும் (௩௱௭)
—மு. கருணாநிதி

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.   (௩௱௮ - 308)
 

பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று (௩௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. (௩௱௮)
—மு. வரதராசன்

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது. (௩௱௮)
—சாலமன் பாப்பையா

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது (௩௱௮)
—மு. கருணாநிதி

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.   (௩௱௯ - 309)
 

ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும் (௩௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். (௩௱௯)
—மு. வரதராசன்

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். (௩௱௯)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும் (௩௱௯)
—மு. கருணாநிதி

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.   (௩௱௰ - 310)
 

அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர் (௩௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். (௩௱௰)
—மு. வரதராசன்

பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே. (௩௱௰)
—சாலமன் பாப்பையா

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார் (௩௱௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: சுபபந்துவராளி  |  தாளம்: ஆதி
பல்லவி:
சினமே தவிர் செம்மையாகும் வாழ்வு
சீலமே பெற தருமே நலமே

அநுபல்லவி:
மனமோ மலர் சினமோ செந்தீயாம்
மலரைத் தீய்க்கலாமோ
மணமதில் உண்டாமோ

சரணம்:
சேர்ந்த பேரைக் கொல்லும் தேர்ந்த நட்பகற்றும்
சிரிப்பும் மகிழ்வும் சேராமல் நீக்கும்
சார்ந்தவர் குடியும் குலமும் கெடுக்கும்
தன்னைக் காக்கவேண்டின் சினம்காக்க நாளும்

"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை" என்பதால்
அறந்தாங்கவே ஆற்றும் குறள் சொல்
அறிந்தே தெளிந்தால் அருள்மேவும் வாழ்வில்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22