அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741)
 

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம் (௭௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். (௭௱௪௰௧)
—மு. வரதராசன்

பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது. (௭௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும் (௭௱௪௰௧)
—மு. கருணாநிதி

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742)
 

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்! (௭௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும். (௭௱௪௰௨)
—மு. வரதராசன்

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும். (௭௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும் (௭௱௪௰௨)
—மு. கருணாநிதி

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743)
 

‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும் (௭௱௪௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். (௭௱௪௰௩)
—மு. வரதராசன்

பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும். (௭௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும் (௭௱௪௰௩)
—மு. கருணாநிதி

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744)
 

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும் (௭௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். (௭௱௪௰௪)
—மு. வரதராசன்

காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண். (௭௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும் (௭௱௪௰௪)
—மு. கருணாநிதி

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745)
 

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண் (௭௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண். (௭௱௪௰௫)
—மு. வரதராசன்

பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண். (௭௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும் (௭௱௪௰௫)
—மு. கருணாநிதி

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746)
 

அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண் (௭௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௬)
—மு. வரதராசன்

உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண். (௭௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும் (௭௱௪௰௬)
—மு. கருணாநிதி

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747)
 

சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்! (௭௱௪௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௭)
—மு. வரதராசன்

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண். (௭௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும் (௭௱௪௰௭)
—மு. கருணாநிதி

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748)
 

வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண் (௭௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும். (௭௱௪௰௮)
—மு. வரதராசன்

கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண். (௭௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும் (௭௱௪௰௮)
—மு. கருணாநிதி

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749)
 

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்! (௭௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். (௭௱௪௰௯)
—மு. வரதராசன்

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண். (௭௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும் (௭௱௪௰௯)
—மு. கருணாநிதி

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750)
 

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும் (௭௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை (௭௱௫௰)
—மு. வரதராசன்

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும். (௭௱௫௰)
—சாலமன் பாப்பையா

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது (௭௱௫௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: நாட்டை  |  தாளம்: ஆதி
பல்லவி:
உடைக்க முடியாத அரண் இதுதான் - மிக்க
உயரமும் அகலமும் உறுதியும் உள்ளது காண்

அநுபல்லவி:
படை எடுத்துப் போர் செய்யச்
செல்லுவோர் தமக்கும்
அடைக்கலமாய் வந்தோர்க்கும்
ஆதரவாகி நிற்கும்

சரணம்:
முற்றுகையிட்டுப் பலநாள் முயன்றாலும்
முறைகெட்டு வஞ்சனையால் கொள்ள நின்றாலும்
பற்றுக்கொண்டே தன்னாட்டின் படைபலம் காக்கும்
பகைவரின் ஊக்கமெல்லாம் அழிய முன் சாய்க்கும்

பணிசெய்யவே எல்லாப் பொருளையும் கொண்டது
பக்கத் துணையாய் நல்ல வீரரும் திரண்டது
"மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையதரண்" என்றிடும் திருக்குறள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22