கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.   (௯௱௨௰௧ - 921)
 

கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள் (௯௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார். (௯௱௨௰௧)
—மு. வரதராசன்

போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள். (௯௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் (௯௱௨௰௧)
—மு. கருணாநிதி

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.   (௯௱௨௰௨ - 922)
 

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! (௯௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். (௯௱௨௰௨)
—மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக. (௯௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம் (௯௱௨௰௨)
—மு. கருணாநிதி

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.   (௯௱௨௰௩ - 923)
 

எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும் (௯௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும். (௯௱௨௰௩)
—மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்? (௯௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள் (௯௱௨௰௩)
—மு. கருணாநிதி

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.   (௯௱௨௰௪ - 924)
 

‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள் (௯௱௨௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள். (௯௱௨௰௪)
—மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள். (௯௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும் (௯௱௨௰௪)
—மு. கருணாநிதி

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.   (௯௱௨௰௫ - 925)
 

தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும் (௯௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும். (௯௱௨௰௫)
—மு. வரதராசன்

விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை. (௯௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும் (௯௱௨௰௫)
—மு. கருணாநிதி

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   (௯௱௨௰௬ - 926)
 

உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர் (௯௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். (௯௱௨௰௬)
—மு. வரதராசன்

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர். (௯௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம் (௯௱௨௰௬)
—மு. கருணாநிதி

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்   (௯௱௨௰௭ - 927)
 

கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர் (௯௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும். (௯௱௨௰௭)
—மு. வரதராசன்

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர். (௯௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் (௯௱௨௰௭)
—மு. கருணாநிதி

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.   (௯௱௨௰௮ - 928)
 

கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக (௯௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும். (௯௱௨௰௮)
—மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும். (௯௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான் (௯௱௨௰௮)
—மு. கருணாநிதி

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.   (௯௱௨௰௯ - 929)
 

கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும் (௯௱௨௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது. (௯௱௨௰௯)
—மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும். (௯௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் (௯௱௨௰௯)
—மு. கருணாநிதி

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.   (௯௱௩௰ - 930)
 

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ? (௯௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ. (௯௱௩௰)
—மு. வரதராசன்

போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ? (௯௱௩௰)
—சாலமன் பாப்பையா

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? (௯௱௩௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்துஸ்தான் காப்பி  |  தாளம்: ஆதி
பல்லவி:
விரும்பலாகுமோ கள்ளை - அந்த
வேசியின் உறவினும் வெறுக்க வேண்டும் இதை

சரணம்:
வரும் பொருள் யாவையும் இறைக்கும் - முன்பு
வாய்த்த நற்புகழையும் குறைக்கும்
இரும்பான தேகமும் வளைக்கும் - காவல்
இதயக் கோட்டையையும் துளைக்கும்

நீரினில் மூழ்கிய ஒருவன் - சொல்லும்
நீதியின் விளக்கமா பெருவன் - அவன்
ஊரில் எங்கும் நகைக்கப் படுவான் - தொழில்
ஊக்கமும் குன்றியே கெடுவான்

முன்னையோர் நல்வழியும் கெடுக்கும் - நல்லான்
முகமும் நாணிப் புறம் கொடுக்கும் - சொல்லத்
தன்னையே தான் மறந்திருக்கும் - பெற்ற
தாயின் அன்புள்ளமும் வெறுக்கும்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - என்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பர் - இதை
நெஞ்சிற் கொண்டால் மயக்கம் தெளிவார் - குறள்
நீதியாம் கள்ளுண்ணாமை புரிவார்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22