இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.   (௪௱௯௰௧ - 491)
 

பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம் (௪௱௯௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது. (௪௱௯௰௧)
—மு. வரதராசன்

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா. (௪௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும் (௪௱௯௰௧)
—மு. கருணாநிதி

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.   (௪௱௯௰௨ - 492)
 

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும் (௪௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும். (௪௱௯௰௨)
—மு. வரதராசன்

பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும். (௪௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும் (௪௱௯௰௨)
—மு. கருணாநிதி

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.   (௪௱௯௰௩ - 493)
 

தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர் (௪௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர், (௪௱௯௰௩)
—மு. வரதராசன்

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர். (௪௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும் (௪௱௯௰௩)
—மு. கருணாநிதி

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.   (௪௱௯௰௪ - 494)
 

தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருங்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள் (௪௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். (௪௱௯௰௪)
—மு. வரதராசன்

ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர். (௪௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள் (௪௱௯௰௪)
—மு. கருணாநிதி

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.   (௪௱௯௰௫ - 495)
 

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரை விட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும் (௪௱௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். (௪௱௯௰௫)
—மு. வரதராசன்

முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். (௪௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும் (௪௱௯௰௫)
—மு. கருணாநிதி

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   (௪௱௯௰௬ - 496)
 

நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா (௪௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. (௪௱௯௰௬)
—மு. வரதராசன்

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா. (௪௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும் (௪௱௯௰௬)
—மு. கருணாநிதி

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்   (௪௱௯௰௭ - 497)
 

செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம் (௪௱௯௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. (௪௱௯௰௭)
—மு. வரதராசன்

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை. (௪௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை (௪௱௯௰௭)
—மு. கருணாநிதி

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.   (௪௱௯௰௮ - 498)
 

சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான் (௪௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். (௪௱௯௰௮)
—மு. வரதராசன்

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும். (௪௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும் (௪௱௯௰௮)
—மு. கருணாநிதி

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   (௪௱௯௰௯ - 499)
 

கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும் (௪௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. (௪௱௯௰௯)
—மு. வரதராசன்

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம். (௪௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல (௪௱௯௰௯)
—மு. கருணாநிதி

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.   (௫௱ - 500)
 

போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும் (௫௱)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். (௫௱)
—மு. வரதராசன்

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். (௫௱)
—சாலமன் பாப்பையா

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும் (௫௱)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: இந்தோளம்  |  தாளம்: கண்ட ஆதி
பல்லவி:
நிலையான இடம் கண்டோம் நெஞ்சே - இனி
நேர்வரும் பகை யெல்லாம்
நெருப்பின் முன் பஞ்சே

அநுபல்லவி:
குலையாத வலிவோடு காலமும் கண்டு
கூடித் தொழில் செய்யவே
குடியாட்சி இடம் கொண்டு

சரணம்:
நீரினில் வலிவுள்ள முதலைபோல் படகு போல்
நிலத்தினில் வலிவுள்ள யானைபோல் தேர் போல்
சீரிடம் மாறாத செயல்திறமே பெருக
செல்லு மிடத்தில் மக்கள் சிறப்புறவே வருக

"எண்ணியார் எண்ணமிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" என்னும் குறள் புரிந்து
திண்ணியராக நாட்டின் தேவைக்கே உழைப்போம்
தீமையெல்லாம் ஒழித்தே நன்மையில் தழைப்போம்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22