தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௧ - 681)
 

தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள் (௬௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள். (௬௱௮௰௧)
—மு. வரதராசன்

நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர். (௬௱௮௰௧)
—சாலமன் பாப்பையா

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும் (௬௱௮௰௧)
—மு. கருணாநிதி

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.   (௬௱௮௰௨ - 682)
 

தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள் (௬௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும். (௬௱௮௰௨)
—மு. வரதராசன்

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன. (௬௱௮௰௨)
—சாலமன் பாப்பையா

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை (௬௱௮௰௨)
—மு. கருணாநிதி

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௩ - 683)
 

அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள் (௬௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். (௬௱௮௰௩)
—மு. வரதராசன்

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும். (௬௱௮௰௩)
—சாலமன் பாப்பையா

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௩)
—மு. கருணாநிதி

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.   (௬௱௮௰௪ - 684)
 

இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான் (௬௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம். (௬௱௮௰௪)
—மு. வரதராசன்

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க. (௬௱௮௰௪)
—சாலமன் பாப்பையா

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௪)
—மு. கருணாநிதி

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.   (௬௱௮௰௫ - 685)
 

விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பவனே தூதன் (௬௱௮௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன். (௬௱௮௰௫)
—மு. வரதராசன்

அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும். (௬௱௮௰௫)
—சாலமன் பாப்பையா

சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும் (௬௱௮௰௫)
—மு. கருணாநிதி

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.   (௬௱௮௰௬ - 686)
 

கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன் (௬௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன். (௬௱௮௰௬)
—மு. வரதராசன்

அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும். (௬௱௮௰௬)
—சாலமன் பாப்பையா

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௬)
—மு. கருணாநிதி

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.   (௬௱௮௰௭ - 687)
 

தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன் (௬௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன். (௬௱௮௰௭)
—மு. வரதராசன்

தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன். (௬௱௮௰௭)
—சாலமன் பாப்பையா

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௭)
—மு. கருணாநிதி

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.   (௬௱௮௰௮ - 688)
 

நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு (௬௱௮௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும். (௬௱௮௰௮)
—மு. வரதராசன்

பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு. (௬௱௮௰௮)
—சாலமன் பாப்பையா

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும் (௬௱௮௰௮)
—மு. கருணாநிதி

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.   (௬௱௮௰௯ - 689)
 

தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய் சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும் (௬௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன். (௬௱௮௰௯)
—மு. வரதராசன்

தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். (௬௱௮௰௯)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௯)
—மு. கருணாநிதி

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.   (௬௱௯௰ - 690)
 

தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன் (௬௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன். (௬௱௯௰)
—மு. வரதராசன்

தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர். (௬௱௯௰)
—சாலமன் பாப்பையா

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான் (௬௱௯௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: கேதாரம்  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
தூது சொல்லத் தகுந்தவர் இவர் காண்!
துணையாய் எந்த அரசும் விரும்பும்

அநுபல்லவி:
ஓதும் கல்வி யறிவும் அழகும்
உண்மை யன்பும் பண்பும் பழகும்

சரணம்:
ஊரை வருந்தாமல் போரை நிறுத்திடும்
உலக சமாதானம் தன்னில் பொருத்திடும்
பாறையாம் பகை நெஞ்சும் மகிழ உரைத்திடும்
பலவும் தொகுத்துச் சொல்லும் இனிமை
பயனை எடுத்துக் காட்டும் தனிமை

"இறுதி பயப்பினும் எஞ்சா திறை வற்கே
உறுதி பயப்பதாம் தூதெ" னும் திருக்குறள்
கருதியே காலத்தால் காணும் இடம் பொருள்
கண்ணஞ்சாமல் நின்று காக்கும்
எண்ணும் நன்மை யாவும் சேர்க்கும்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22