உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.   (௲௨௱௩௰௧ - 1231)
 

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின (௲௨௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன. (௲௨௱௩௰௧)
—மு. வரதராசன்

பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன. (௲௨௱௩௰௧)
—சாலமன் பாப்பையா

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன (௲௨௱௩௰௧)
—மு. கருணாநிதி

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.   (௲௨௱௩௰௨ - 1232)
 

பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே! (௲௨௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன. (௲௨௱௩௰௨)
—மு. வரதராசன்

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்! (௲௨௱௩௰௨)
—சாலமன் பாப்பையா

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன (௲௨௱௩௰௨)
—மு. கருணாநிதி

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.   (௲௨௱௩௰௩ - 1233)
 

காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே! (௲௨௱௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன. (௲௨௱௩௰௩)
—மு. வரதராசன்

அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும். (௲௨௱௩௰௩)
—சாலமன் பாப்பையா

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும் (௲௨௱௩௰௩)
—மு. கருணாநிதி

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௪ - 1234)
 

தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே! (௲௨௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. (௲௨௱௩௰௪)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன. (௲௨௱௩௰௪)
—சாலமன் பாப்பையா

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக (௲௨௱௩௰௪)
—மு. கருணாநிதி

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௫ - 1235)
 

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே! (௲௨௱௩௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. (௲௨௱௩௰௫)
—மு. வரதராசன்

வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன. (௲௨௱௩௰௫)
—சாலமன் பாப்பையா

வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன (௲௨௱௩௰௫)
—மு. கருணாநிதி

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.   (௲௨௱௩௰௬ - 1236)
 

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே! (௲௨௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். (௲௨௱௩௰௬)
—மு. வரதராசன்

வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன். (௲௨௱௩௰௬)
—சாலமன் பாப்பையா

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன் (௲௨௱௩௰௬)
—மு. கருணாநிதி

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.   (௲௨௱௩௰௭ - 1237)
 

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ! (௲௨௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ? (௲௨௱௩௰௭)
—மு. வரதராசன்

நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ? (௲௨௱௩௰௭)
—சாலமன் பாப்பையா

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ? (௲௨௱௩௰௭)
—மு. கருணாநிதி

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.   (௲௨௱௩௰௮ - 1238)
 

தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே! (௲௨௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. (௲௨௱௩௰௮)
—மு. வரதராசன்

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே! (௲௨௱௩௰௮)
—சாலமன் பாப்பையா

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது (௲௨௱௩௰௮)
—மு. கருணாநிதி

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.   (௲௨௱௩௰௯ - 1239)
 

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே! (௲௨௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன. (௲௨௱௩௰௯)
—மு. வரதராசன்

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ? (௲௨௱௩௰௯)
—சாலமன் பாப்பையா

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன (௲௨௱௩௰௯)
—மு. கருணாநிதி

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.   (௲௨௱௪௰ - 1240)
 

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது! (௲௨௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது. (௲௨௱௪௰)
—மு. வரதராசன்

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே! (௲௨௱௪௰)
—சாலமன் பாப்பையா

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது (௲௨௱௪௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: செஞ்சுருட்டி  |  தாளம்: ஆதி
பல்லவி:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - பாங்கி
நறுமலர் நாணின கண்

அநுபல்லவி:
அருமை மணாளரின் பிரிவை ஆற்றாமலே
அந்தோ உறுப்பு நலன்
அழிதலுக் கென்ன செய்வேன்

சரணம்:
கோரிக்கை நிறைவேறிக் கூடிக் களித்திருந்தோம்
குறையும் பொருளை வேண்டி நிறைபொருள் எனை மறந்தார்
வாரித் தழுவிய நாள் பூரித்த தோளிரண்டும்
வாடி மெலிந்ததுவே வளையும் கழன்றதுவே

உண்ணும் உணவும் வேண்டா வெறுப்பாகக் கசந்தது
ஊரிற் பறை அறைய உண்கண்ணும் பசந்தது
எண்ணும் நெஞ்சே நீ அந்தக் கொடியவர் முன் செல்வாயா?
என்தோளின் பூசல் சொல்லிப் பெருமையும் கொள்வாயா?




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22