புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.   (௨௱௫௰௧ - 251)
 

தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்? (௨௱௫௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். (௨௱௫௰௧)
—மு. வரதராசன்

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்? (௨௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும் (௨௱௫௰௧)
—மு. கருணாநிதி

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.   (௨௱௫௰௨ - 252)
 

பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை (௨௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை. (௨௱௫௰௨)
—மு. வரதராசன்

பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை. (௨௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை (௨௱௫௰௨)
—மு. கருணாநிதி

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.   (௨௱௫௰௩ - 253)
 

ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது (௨௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. (௨௱௫௰௩)
—மு. வரதராசன்

கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது. (௨௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல (௨௱௫௰௩)
—மு. கருணாநிதி

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.   (௨௱௫௰௪ - 254)
 

கொல்லாமையே அருள் ஆகும்; ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும் (௨௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. (௨௱௫௰௪)
—மு. வரதராசன்

இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே (௨௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது (௨௱௫௰௪)
—மு. கருணாநிதி

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.   (௨௱௫௰௫ - 255)
 

உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது (௨௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது. (௨௱௫௰௫)
—மு. வரதராசன்

இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது. (௨௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன (௨௱௫௰௫)
—மு. கருணாநிதி

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.   (௨௱௫௰௬ - 256)
 

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள் (௨௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார். (௨௱௫௰௬)
—மு. வரதராசன்

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார். (௨௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார் (௨௱௫௰௬)
—மு. கருணாநிதி

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.   (௨௱௫௰௭ - 257)
 

புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும் (௨௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். (௨௱௫௰௭)
—மு. வரதராசன்

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது. (௨௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும் (௨௱௫௰௭)
—மு. கருணாநிதி

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.   (௨௱௫௰௮ - 258)
 

பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள் (௨௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார். (௨௱௫௰௮)
—மு. வரதராசன்

பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார். (௨௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள் (௨௱௫௰௮)
—மு. கருணாநிதி

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (௨௱௫௰௯ - 259)
 

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும் (௨௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. (௨௱௫௰௯)
—மு. வரதராசன்

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது. (௨௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது (௨௱௫௰௯)
—மு. கருணாநிதி

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.   (௨௱௬௰ - 260)
 

கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும் (௨௱௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். (௨௱௬௰)
—மு. வரதராசன்

எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும். (௨௱௬௰)
—சாலமன் பாப்பையா

புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும் (௨௱௬௰)
—மு. கருணாநிதி

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

இராகம்: ஆரபி  |  தாளம்: ரூபகம்
பல்லவி:
உயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ
உடலைக் காக்க

அநுபல்லவி:
பயிரைக் காக்கும் உழவன் போல
பசுவைக் காக்கும் ஆயன் போல
உயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்
உள்ளங் கொண்டே ஊனை விரும்பி

சரணம்:
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்
தன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்
தின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்
தேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ

சேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே
தேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே
கூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்
கொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்




பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22